பூடானில் பிரதமர் நரேந்திர மோடி.. செங்கம்பள வரவேற்பு!
திம்பு: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இன்று முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று 3 வாரங்களுக்கு பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று பூடான் சென்றார். பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரும் பூடான் சென்றனர்.
பூடானின் பாரோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஷெரிங் தோப்கே வரவேற்றார். பின்னர் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் இருந்து திம்புவுக்கு புறப்பட்டார் மோடி.
பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியெல் வாங்சுக், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய குழு சந்தித்து பேசுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளையும், ஒப்பந்தங்களையும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
வர்த்தகம், நீர்மின் நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் பூடான் நாட்டு நாடாளுமன்றம் மற்றும் தேசிய கவுன்சில் கூட்டுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
ஏற்கெனவே பூடான் நாட்டுடன் சீனா தூதரக உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.