டண்டணக்க டண்டணக்க டண்டணக்க.. முரசொலியுடன் பிரசாரத்தை முடித்த மோடி!
தௌசா: பரபரப்பாக நடைபெற்று வந்த ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் நேற்று பிரதமர் மோடி வெற்றியின் சின்னமாக முரசை இசைத்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று பாரம்பரிய மிகப்பெரிய முரசை இசைத்தார் மோடி. இது ராஜஸ்தானில் வெற்றியின் இசையாக கருதப்படுகிறது.
முரசு அல்லது டோலக் என்றழைக்கப்படும் அதனை இசைக்கும் காணொளியை பிரதமர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு 32, 000 லைக்குகள் கிடைத்துள்ளது.
பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய மோடி குழப்பமடைந்த கட்சி குழப்பமடைந்த தலைமை என கடுமையாக சாடினார். முன்னதாக ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தில் ஒரு திட்டத்தின் பெயரை தவறாக கூறியதை சுட்டிக்காட்டிய மோடி, கும்பராம்-க்கும் கும்ப்கரன்-க்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அவர்கள் என்றார்.
சட்டிஸ்கரிலும் இதுபோல் பாரம்பரிய முரசை பேரணி ஒன்றின் தொடக்கத்திற்கு முன்னதாக மோடி கடந்த மாதம் இசைத்துள்ளார். இதனை தனது வாடிக்கையாகவே வைத்துள்ள மோடி முதல் முறையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் சென்ற போது இசைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.