திடீரென வளர்ந்த மோடியின் தாடி... காரணம் இதுதான்... போட்டு தாக்கும் விவசாய சங்க தலைவர்
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலுக்காக ரவீந்திரநாத் தாகூரைப் போல இருக்க வேண்டும் என பிரமதர் நரேந்திர மோடி, தாடியை வளர்ந்து வருவதாக விவசாயச் சங்க தலைவர் நரேஷ் டிக்கைட் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் முழுவதும் கிசான் மகாபஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியை விவசாயிகள் நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாய தலைவர்கள் விவசாய சட்டங்கள் குறித்து விளக்கி வருகின்றனர்.
விவசாயிகளைப் பிரிக்க முயல்கின்றனர்
அதன்படி உத்தரப் பிரதேசத்தின் பராபங்கி என்ற பகுதியில் நடைபெற்ற கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனிசன் தலைவர் நரேஷ் டிக்கைட் கலந்துகொண்டார். அப்போது பேசிய நரேஷ் டிக்கைட், "மத்திய அரசின் மூன்று சட்டங்களும் கறுப்புச் சட்டங்கள். இந்தச் சட்டங்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அவர்கள் முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் பிரித்ததைப் போலவே, இப்போது விவசாயிகளைப் பிரித்துள்ளனர். இந்த அரசு நம்மிடம் இருந்த அனைத்தையும் பாழாக்கிவிட்டது" என்றார்.
பிரதமர் மோடியின் தாடி
தொடர்ந்து பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய நரேஷ் டிக்கைட், "அவரது தாடிக்கு பின்னால் ஒறு ரசகியம் உள்ளது. மேற்கு வங்க தேர்தலுக்காகவே அவர் இப்போது தாடியை வளர்க்கிறார். பார்க்க ரவீந்திரநாத் தாகூரை போல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தாடி வளர்க்கிறார். மேற்கு வங்காள தேர்தலுக்குப் பிறகு, அவரது தாடி பழைய நிலைக்குச் சென்றுவிடும் பாருங்கள்" என்று தாக்கி பேசினார்,
நிம்மதியாக இருக்கவிட மாட்டோம்
முன்னதாக ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மாகா பஞ்சாயத்து நிகழ்வில் பேசிய நரேஷ் டிக்கைட், தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை மோடி அரசை நிம்மதியாக இருக்கவிட மாட்டோம் என்றார். மேலும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 40 விவசாயச் சங்க தலைவர்கள் நாடு முழுவதும் சென்று விவசாய சட்டங்கள் குறித்துப் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உடன்பாடு இல்லை
இந்த மூன்று விவசாய சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாய சட்டங்களை 18 மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், விவசாய சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளதால் போராட்டம் தொடர்கிறது.