அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபட்ட பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி அனுமன்ஹாரி கோயிலுக்குச் சென்று தானே பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி ராம பக்தர் ஆஞ்சநேயரை முதலில் வழிபட்டார். ராமரை வணங்கும் முன் ராம பக்தரை வழிபட்டு விட்டு ராம ஜென்ம பூமிக்கு சென்று அங்கு குழந்தை ராமரை வழிபட்டார் பிரதமர் மோடி.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும் விழாக்கோலம் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான இடங்களில் வண்ண விளக்குகள், தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விழாவில் பங்கேற்பதற்காக காலை 9.35 மணிக்கு டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்ட பிரதமர் லக்னோ வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்தடைந்தார். அங்கிருந்து நேராக அனுமன்ஹாரி கோயிலுக்குச் சென்ற மோடி அங்கு சாமி தரிசனம் செய்தார். தனது கையால் பூஜை செய்து பிரகாரத்தை வலம் வந்த மோடி ராம ஜென்ம பூமிக்கு புறப்பட்டு சென்றார்.
சீதையை சிறைஎடுத்துச் சென்ற ராவணனை வதம் செய்து விட்டு அயோத்தி திரும்பும் ராமர் அனுமனுக்கு அயோத்தியில் ஒரு இடம் கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன்ஹாரி என அழைக்கப்படுகிறது. ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெறுவதால் அனுமன் கோவிலிலும் திங்கட்கிழமை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
அனுமரை வழிபட்ட பின்னர் ராமஜென்ம பூமிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு குழந்தை ராமரை வழிபட்டார். இதனையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவதற்கு வெள்ளி செங்கலை எடுத்து கொடுத்தார். அடிக்கல் நாட்டு விழாவின் போது பிரதமருடன் மேடையில் இருக்க 4 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
ராமாயணத்தில் அனுமனையும் ராமனையும் பிரிக்க முடியாது எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் இருப்பார் என்பது ஐதீகம். எனவேதான் பிரதமர் மோடி அனுமனை வழிபட்டு அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்றார்.
மொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்
கொரோனா தொற்று சூழல் காரணமாக நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்றுள்ளனர். விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.