நாட்டின் மிக நீளமான சுரங்க சாலையை திறந்து வைத்தார் நரேந்திர மோடி!
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நாட்டிலேயே மிகவும் நீளமான சுரங்க சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இம்மாநிலத்தில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் சாலையில் பருவ கால மாற்றத்தால் அவ்வப்போது நிலச்சரிவு, பாறைகள் உருண்டு வருதல், உள்ளிட்டவை நிகழ்ந்தால் மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலை நாள்கணக்கில் துண்டிக்கப்பட்டு பிறகு நிலைமை சீரான பிறகு வாகன பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
இதனால் சாலையில் நீண்ட தூரத்துக்கு அனைத்து வாகனங்களும், சரக்கு லாரிகளும் தேங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு அனைத்து பருவ நிலைகளுக்கு ஏற்ற வகையிலான சாலையை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 1200 மீட்டர் உயரத்தில் மலைகளை குடைந்து அமைக்க கடந்த 2011-இல் நெடுஞ்சாலைத் துறையினரால் திட்டம் தொடங்கப்பட்டது.
9.2 கி.மீ. நீளமான இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதனால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. இந்த சுரங்க பாதையினால் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்வதற்கான 41 கி.மீ தூரத்தில் 9.2 கி.மீட்டர் தூரம் குறைக்கப்படும். பயண நேரமும் 2 மணி நேரம் குறையும். இந்த திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.2519 கோடியாகும்.
மேலும் இந்த சாலையால் ஆண்டுக்கு ரூ.99 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படும். இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்க சாலை என்ற பெருமையை பெற்ற இந்த வழித்தடம் செனானி, நஷ்ரி ஆகிய நகரங்களை இணைக்கும்.