உள்நாட்டில் தயாரான மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொல்கத்தா: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பை வந்தார். மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஐ.என்.எஸ்.கொல்கத்தா' என்ற போர்க்கப்பலை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்ட இந்த போர்க்கப்பல், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிக பெரிய போர்க்கப்பல் ஆகும்.
அப்போது நரேந்திரமோடி பேசியதாவது: நேற்று நாம் சுதந்திர தினத்தை கொண்டாடினோம். ஆனால் இந்தியா தற்போது சுதந்திரமாக இருக்க நமது ராணுவ படைதான் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
‘ஐ.என்.எஸ்.கொல்கத்தா' நமது கடற்படை பலத்தை உலகத்துக்கெல்லாம் பறை சாற்றியிருக்கும். இந்த கப்பல், பாதுகாப்பு துறையில் நாம் அடைந்துள்ள சுய சார்புக்கு ஒரு அடையாளம். நமது ராணுவத்தின் சுய நம்பிக்கையையும் இந்த கப்பல் அதிகரிக்கும்.
‘ஐ.என்.எஸ்.கொல்கத்தா' கப்பலின் திறனை பற்றி அறிந்த எந்த ஒரு நாட்டுக்கும், இந்தியாவுக்கு சவால்விடுக்கும் தைரியம் வராது. உலகின் பிற நாடுகளுக்கும் ஆயுதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர வேண்டும் என்பதே நமது கனவு. இதற்காகவே பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரின் பின்னால் இந்த தேசமே இருக்கிறது. உங்களது சேவையை கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார். மேலும், போர்க்கப்பலில் பயணித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர்கள், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, கடற்படை தளபதி ஆர்.கே.தவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.