தேநீர் விருந்து... சோனியா, மன்மோகனுடன் பிரதமர் மோடி சந்திப்பு - ஜி.எஸ்.டி. மசோதா குறித்து ஆலோசனை!!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜி.எஸ்.எடி.) நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நாட்டில் நடைமுறையில் உள்ள பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாறாகத்தான் சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
இம்மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். ராஜ்யசபாவில் ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை. ஆகையால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. உள்ளது.
இதன் ஒருபகுதியாகத்தான் இன்றைய தேநீர் விருந்துக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்தார். அதன்பேரில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள பிரதமர் இல்லத்திற்கு சோனியா, மன்மோகன்சிங் வந்தனர். இந்த விருந்தில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டுள்ளனர்.
இச்சந்திப்பின் போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்தும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜி.எஸ்.எடி.) நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் இதுகுறித்து அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.