காவல்துறையில் கணினி.. கர்நாடக போலீசாரை வீடியோ கான்பரன்சில் அழைத்து பாராட்டிய மோடி!
பெங்களூர்: குற்றவாளிகள் குறித்த தகவல் பரிமாற்றத்திற்கு கர்நாடக காவல்துறை கையாளும் டிஜிட்டல் வழிமுறைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி கேட்டறிந்து காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிறந்த காவல்நிலையங்களாக உ.பி, அசாம் மற்றும் கர்நாடகாவில் தலா 1 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்த மத்திய உள்துறை அமைச்சகம், அந்த காவல் நிலைய செயல்பாடு குறித்து பிரதமர் மோடி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.
கர்நாடகாவில், பெங்களூர் நகரிலுள்ள கப்பன்பார்க் காவல் நிலையம் சிறந்த தகவல் பரிமாற்றம் கொண்டதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீடியோ கான்பரன்சிங் மூலமாக மோடி அங்குள்ள போலீசாரிடம் உரையாற்றினார். பெங்களூரு நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா, 2 கான்ஸ்டபிள்கள் இதில் பங்கேற்றனர்.
கர்நாடக காவல்துறை தகவல் தொழில்நுட்பம் மூலம் கிரிமினல்கள் குறித்த தகவல்களை பகிர்வது, பயன்படுத்துவது எப்படி என்பதன் விளக்க வீடியோவை பாலகிருஷ்ணா காண்பித்தார்.
கர்நாடகாவின் அனைத்து காவல் நிலையங்களும் ஒன்றோடு ஒன்று ரியல் டைம் மேனேஜ்மென்ட் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு மையம் மூலம் இது சாத்தியமாகிறது என்று மோடிக்கு விளக்கப்பட்டது.
பிற மாநிலங்களிலும் இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய தேவைப்படும் வசதிகள் குறித்து மோடி அப்போது கேட்டறிந்தார். கர்நாடக காவல்துறைக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.