தபால் துறை வரலாற்றில் மைல் கல்.. வங்கிகளாக மாறும் போஸ்ட் ஆபீஸ்கள்! திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
டெல்லி: இந்திய தபால் துறை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ்' வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
ரயில்வே, போலவே நாடு முழுக்க பரந்துவிரிந்த மத்திய அரசின் ஒரு துறைதான் தபால் சேவைகள் துறை.
தந்தி பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், கடிதம் எழுதும் வழக்கம் மிக மிக அரிதாக இருக்கும் இந்த சூழ்நிலையில், தபால் நிலையங்களை வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. இதன் ஒரு வழி தான் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை.
|
துவக்க விழா
டெல்லியில் இன்று நடைபெற்ற, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ், துவக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வங்கி சேவையை இந்தியா போஸ்ட் மூலமாகக் கொண்டு சேர்ப்போம் என்று தெரிவித்தார். முதல் கட்டமாக நாடு முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் இதன் செயல்பாடு தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவிலுள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களும் இந்த சேவைக்குள் இணைக்கப்படும்.
தனியாருக்கு போட்டி
ஏற்கனவே தனியார் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகியவை பேமெண்ட் வங்கி சேவையை வழங்குகின்றன. அதனுடன் போட்டி போட வசதியாக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மத்திய அரசு 1,435 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சாமானிய மக்களும் வங்கிகளுடன் இணைக்கப்படுகிறார்கள். பணம் நெறிமுறைக்கள் வருகிறது.
என்னென்ன சேவைகள்
பிற வங்கிகளை போலவே இந்த வங்கியும் செயல்படும் என்ற போதிலும், கடன் கொடுப்பது, கிரெடிட் கார்டு கொடுப்பது ஆகிய வசதிகள் இதில் இருக்காது. சேமிப்பு கணக்கு, கரண்ட் அக்கவுண்ட், பண பரிவர்த்தனைகள், பல்வேறு அரசு திட்டங்களுக்கு நேரடி மானியத்தை பெறுவதற்காக வங்கி கணக்கு துவங்குதல், பில்கள் செலுத்துதல் போன்ற வசதிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் உண்டு.
அதிரடி திட்டம்
தபால் நிலைய கவுண்டர்கள், ஏடிஎம்கள், மொபைல் போன் பேங்கிங், ஆகியவற்றின் மூலம் இந்த சேவையை பயன்படுத்த வசதி உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளை பேமெண்ட்ஸ் வங்கிகளில் செய்ய முடியும். மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏஜெண்டாகவும் இது செயல்படும். ஏற்கனவே உள்ள 17 கோடி தபால் சேமிப்பு வங்கி கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களை சேர்க்கும் பணி மற்றும் செலவு குறைகிறது.