தற்கொலைப்படை தாக்குதல் நடந்த பிரஸ்ஸல்ஸுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
டெல்லி: பெல்ஜியம், அமெரிக்கா, செளதி ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி புதன்கிழமை முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதில் முதல் கட்டமாக அண்மையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்ட பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
பிரஸ்ஸல்ஸ் நகரில் கடந்த 22-ந் தேதி விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.எஸ். தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 34 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியரான ராகவேந்திரன் கணேசன் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ராகவேந்திரன் கணேசன் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவரது உடல் செவ்வாய்க்கிழமை சென்னை கொண்டு வரப்பட்டது.
பிரஸ்ஸல்ஸ் புறப்பட்டார் மோடி
இதனிடையே பிரதமர் மோடியின் பிரஸ்ஸல்ஸ் பயணம் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரவு பிரஸ்ஸல்ஸ் புறப்பட்டுச் சென்றார். ஐ.எஸ். தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பெல்ஜிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர் சந்திப்புகள்...
பெல்ஜியம் நாட்டு வைர வியாபாரிகள் உள்ளிட்ட தொழில் அதிபர்களையும் மோடி சந்திக்கிறார். மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறார். பெல்ஜியம் நாட்டு எம்.பி.க்களையும், இந்திய வம்சாவளியினரையும் மோடி சந்தித்து பேசுகிறார்.
ஒபாமாவை சந்திக்கிறார்...
பின்னர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் 4-வது அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்துப் பேசுகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இம்மாநாட்டில் கலந்து கொண்டாலும் அவரை மோடி சந்திப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
செளதி பயணம்
இதன் பின்னர் ஏப்ரல் 2-ந் தேதி வாஷிங்டனில் இருந்து செளதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு மோடி செல்கிறார். அங்கு மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.