மத்திய அமைச்சரவையில் மாற்றம்? மகா. பா.ஜ.க. தலைவரானதால் தான்வே ராஜினாமா செய்கிறார்!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற போது 22 கேபினட் அமைச்சர்கள், 22 இணை அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.
மேலும் அமைச்சரவையில் சிவசேனா கூடுதல் முக்கியத்துவத்தை எதிர்பார்த்தும் வந்தது. இந்த நிலையில் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே, மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதாவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இதனால் பாரதிய ஜனதா கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தான்வே ராஜினாமா செய்ய உள்ளார். அவருக்கு பதில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சேர்ந்த மற்றொருவர் மத்திய அமைச்சராகலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான அனில்தேசாய்க்கு தனிப் பொறுப்புடன் கூடிய கேபினட் அமைச்சர் பதவி வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இந்த மாற்றம் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது