வாயை விட்டு வாங்கி கட்டிய மோடி.. சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டதற்கு மலையாளிகள் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவோடு கேரளாவை ஒப்பிட்டு பேசி, வாக்குகளை அள்ள நினைத்த பிரதமர் மோடிக்கு, மலையாளிகள் கடும் கோபத்தை பரிசாக அளித்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த ஞாயிறன்று கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் கேரள பழங்குடி சமூகத்தின் மத்தியில் குழந்தைகள் இறப்பு விகிதம் சோமாலியாவை விட மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
இது கேரளாவிலுள்ள பெரும்பான்மையான மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களை உயர்வாகவே மதிக்கும், கேரள மக்களால், வன்முறை, வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவுடன் தங்கள் மாநிலத்தை ஒப்பிட்டு பேசியதை தாங்க முடியவில்லை.
இது குறித்து அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால் நடித்த மலையாள படமான நரசிம்ஹாவில் உள்ள பிரபல வசனமான "நீ போ மோனே தினேஷா" என்பதை கொஞ்சம் மாற்றி "போ மோனே மோடி"(PoMoneModi) என்ற டுவிட்டர் ஹேஸ்டேக்கை டிரெண்டிங் செய்து மலையாளிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.