பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை மீட்க இதுவே சரியான நேரம்: மோடிக்கு ராம்தேவ் வேண்டுகோள்
டெல்லி: பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியா மீட்க இதுவே சரியான நேரம். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது.
பாகிஸ்தானிடமிருந்து அந்த பகுதிகளை விடுவித்து மீட்டெடுக்க பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவங்க வேண்டும். நம்முடைய பெருமைக்குரிய நாட்டில் காஷ்மீரின் ஒரு பகுதியை கோழைத்தனமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளது.
அதை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. நம்முடைய குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில் மட்டும்தான் பார்த்து வருகின்றனர். ஒருநாள் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்போம் என நவாஸ் செரிப் சொல்கிறார்.
பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவை குறிவைத்து தாக்கி வரும் தீவிரவாத இயக்கங்களை தரைமட்டமாக்க உறுதியான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும். தீவிரவாதியான புர்ஹான் வானியை நவாஸ் செரிப் பாராட்டுகிறார். அவனை தியாகி என வர்ணிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.