யோகா, ஆயுர்வேத்திற்கென தனி அமைச்சரை போட்ட மோடி
டெல்லி: யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றுக்காகதனியாக ஒரு அமைச்சரை நியமித்துள்ளார் பிரதமர் மோடி.
ஆயுஷ் என்று இந்தத் துறைக்குப் பெயர். இதற்கான இணை அமைச்சராக தனிப் பொறுப்புடன் ஸ்ரீபாத எஸ்ஸோ நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது துறையின் கீழ் ஆயுர்வேதம், யோகாசனம், நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை வரும்.
இதுவரை இந்த துறை, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆயுஷ் தனியாக பிரிந்துள்ளது.
மோடி, ஒரு யோகா பிரியர். தினசரி யோகா செய்த பிறகுதான் தனது வேலையைத் தொடங்குவார். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்டபோது, சர்வதேச யோகா தினத்தை ஐநா. கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு 50 நாடுகளின் ஆதரவும் கிடைத்தது.
அமெரிக்கா, சீனா கூட மோடியின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யோகா குறித்து, தான் சந்திக்கும் உலகத் தலைவர்களிடமும் எடுத்துக் கூறி ரெக்கமன்ட் செய்தும் வருகிறார் மோடி. ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்பாட் டெல்லி வந்திருந்தபோது அவருக்கு ஒரு யோகா குறித்த புத்தகத்தைக் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
யோகா குறித்து மோடி கூறுகையில், யோகா மனதையும், உடலையும் ஒருங்கிணைக்கிறது. நமது செயலை, சிந்தனையை ஒருங்கிணைக்கிறது, நம்மை ஆசுவாசப்படுத்துகிறது, முழுமைப்படுத்துகிறது, இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான பாலம்தான் யோகா என்று கூறியுள்ளார்.