இரண்டாவது சர்வதேச யோகா தினம்... சண்டிகரில் மோடி பங்கேற்றார்!
சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று ஜூன் 21-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை சண்டிகரில் நடந்த யோகா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது. அதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
சண்டிகரில் மோடி...
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி, சண்டிகாரில் நடைபெற்றது. அதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக, 150 மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி, 7.45 மணிக்கு முடிவடைந்தது.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்று, சிறப்பாக ஆசனம் செய்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.8 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. எனவே, பங்கேற்பாளர்கள், தாங்கள் யோகா செய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம். ‘செல்பி' எடுப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில், மத்திய அரசும், டெல்லி மாநகராட்சியும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
நாடு முழுவதும் நடக்கும் யோகா பயிற்சிகளில், பதஞ்சலி யோகா பீடம், வாழும் கலை அறக்கட்டளை, பிரஜாபிதா பிரம்ம குமாரி ஐஸ்வரிய வித்யாலயா போன்ற அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்கள், மத்திய துணை ராணுவப்படையினர், முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.
இதுதவிர, உலகம் முழுவதும் 173 இந்திய தூதரகங்கள், யோகா குறித்த விழிப்புணர்ச்சியை பரப்ப யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.