பிரணாப்முகர்ஜியின் மனைவி சுர்வாவிற்கு பிரதமர் மோடி அஞ்சலி
டெல்லி: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. சுர்வாவின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லியில் உள்ள ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செவ்வாய்கிழமையன்று காலை சவ்ராவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. பகல் 11 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
சுர்வாவின் உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி வரை வைக்கப்பட்டு இருந்தது. சுர்வாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பிறகு தல்கதோராவில் உள்ள பிரணாப்முகர்ஜியின் மகனும், எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுர்வா முகர்ஜி அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த குடும்ப உறுப்பினர் என்ற முறையில் வந்துள்ளேன், இது ஒரு உணர்வுபூர்வமான நேரம். சுர்வா முகர்ஜியை எனக்கு இளம் வயதிலேயே தெரியும். அவர் எனக்கு உணவு தந்துள்ளார் என்று கூறினார்.
சுர்வா முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் அவரது சகோதரி ஷேக் ரேஹனா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஏ.எச் மஹ்மூத் அலி ஆகியோரும் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.