தமிழ் ஒரு சிறந்த மொழி.. பிற மாநிலங்களும் தமிழை அறிய வேண்டும்.. பிரதமர் மோடி புகழாரம்
தமிழகத்தோடு மற்றொரு மாநிலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யட்டும், தமிழ் வாக்கியங்களை அந்த மாநிலங்கள் கற்கட்டும், தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளட்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மோடி.
டெல்லி: இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புகழ்ந்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்ற கோஷத்தின்கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்த மோடி பேசும் சிறு வீடியோ காட்சி, அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
மோடி பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் மற்றும் நாட்டின் மதிப்பும் அதில் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த மொழி தமிழ்
மேலும், இந்திய மொழிகளில் தமிழ் மொழி பழமையானது, தமிழ் ஒரு சிறந்த மொழி, இந்தியாவின் பழமையான கலாசாரத்தில் தமிழின் பங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார் மோடி.
கலாசார பரிமாற்றம்
ஆனால், எனக்கு தமிழ் மொழி அறிமுகமே இல்லை என்றும் அவர் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார். இப்படி நாட்டிலுள்ள ஒரு பழமையான மொழியை இன்னொரு மாநிலத்தவர்கள் அறியாமல் இருக்க கூடாது என்பதால்தான், மாநிலங்கள் நடுவே கலாசார பரிமாற்றம் அவசியம் என்கிறார் மோடி.
பிற மாநிலங்கள்
தமிழகத்தோடு மற்றொரு மாநிலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யட்டும், தமிழ் வாக்கியங்களை அந்த மாநிலங்கள் கற்கட்டும், தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளட்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மோடி.
திரைப்பட விழாக்கள் உதவும்
இப்படி தமிழ் மொழியை பிற மாநிலங்கள் புரிந்துகொள்ள வசதியாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள மாநிலம், தனது மாநிலத்தில் தமிழ் திரைப்பட விழாக்களை நடத்தலாம், தமிழக இளைஞர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என்றும் மோடி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
|
அனைத்து மாநிலங்களும் இணக்கம்
இதே பாணியில், ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, கலாசார பரிமாற்றம் நடத்த வேண்டும். ஹரியானா தெலுங்கானாவுடனும், மேற்கு வங்கம், அசாமுடனும், குஜராத், சட்டீஸ்கருடன் ஒப்பந்தம் செய்யலாம். இதனால் இந்தியாவின் பழமையான கலாசாரம் பேணி பாதுகாகப்படும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.