சகிப்புத்தன்மைதான் இந்தியாவின் பலம்: மோடி அரசை விமர்சித்து லோக்சபாவில் ராகுல் காந்தி பேச்சு
டெல்லி: சகிப்புத்தன்மை குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசினார். சகிப்புத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
சகிப்புத்தன்மை குறித்த விவாதம் நேற்று லோக்சபாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மார்சிஸ்ட் கட்சி எம்.பி சலீம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பற்றி தெரிவித்த கருத்து அமளியை ஏற்படுத்தியதால் அலுவல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் கேள்வி நேரம் நடைபெற்றது. மதியம், மீண்டும் சகிப்பின்மை விவாதம் தொடங்கியது. சசி தரூர் போன்ற பல எம்.பிக்கள் சகிப்பின்மை பற்றி பேசிய பிறகு மாலையில், ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: தலித்துகளை நாய்களோடு ஒப்பிட்ட அமைச்சர் வி.கே.சிங் போன்றோர் பதவியில் தொடர மோடி அனுமதித்துள்ளார்.
ஒரு முஸ்லிம் நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றும் உச்ச பொறுப்பில் இருக்கும் பிரதமரோ அதுபற்றி வாய் திறக்கவில்லை.
கலவரங்கள் திட்டமிட்டு, உருவாக்கப்படுவதாக அருண் ஜெட்லி கூறியிருந்தார். இது ஒன்றும் மேக் இன் இந்தியா போல கனவு கிடையாது. நிஜத்தில் நடப்பதைதான் சொல்கிறோம். யாராவது போராடினாலே உடனே அவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்கிறது. குஜராத் மாடல் நிர்வாகம் என்ற பலூன் தற்போது வெடித்து சிதறிவிட்டது. பட்டேல்கள் போராட்டம் அதை அம்பலப்படுத்திவிட்டது.
பாகிஸ்தானின் பலவீனமே, சகிப்பின்மைதான். நமது பலவீனம், சகிப்புத்தன்மைதான். பாகிஸ்தான் அந்த நாட்டு மக்கள் கருத்துக்களை கேட்பதில்லை. ஆனால், இந்தியாவில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். ஒரு சார்பாக இருப்பதை நிறுத்தாதவரை நாம் வளர முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதில் கூறினார்.