பிரதமர் மோடியின் தாயார் ஹிரபா மருத்துவமனையில் அனுமதி
ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிரபா மோடி (78), ஆமதாபாத்தில் தனது மூத்த மகனான பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் காந்திநகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபற்றி அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பரசி வோரா கூறுகையில்' பிரதமரின் தாயார் ஹிரபாவுக்கு வயது முதிர்வால் ஏற்பட்ட நோய்களுக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.' என்றார்.
மருத்துவமனை வட்டாரம் தரப்பில் வெளியான தகவலில் பிரதமரின் தாயார் தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.