ராஜஸ்தான்: மோடி- அசோக் கெலாட் மோதல்- வாக்காளர்கள் கனத்த மவுனம்.. பாஜகவுக்கு 'ரெட்' அலர்ட்!
ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் களநிலவரம் என்பது பிரதமர் மோடிக்கும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் செயல்பாடுகளுக்கும் இடையே போட்டி என்பதாக உள்ளது.
ராஜஸ்தானில் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்துவிட்டது. இன்று எஞ்சிய 12 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று தேர்தல் நடைபெற்று வரும் 12 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 99 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 61 தொகுதிகளை அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.
ராஜஸ்தான் தேர்தல் களமானது அம்மாநில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயானது என்பதாக மாறியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி அறிவித்த ஆண்டுக்கு ரூ72,000 நிதி உதவி என்ற வாக்குறுதி வாக்காலர்களை பெரும் அளவில் ஈர்த்திருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்கிற அசோக் கெலாட்டின் நடவடிக்கை வாக்காளர்களை மிகவும் உற்சாகப்பத்தியிருக்கிறது எனலாம்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது மற்றும் தேசப்பற்று கோஷங்கள் நகோர், ஜுன்ஜூனு, சிகார் உள்ளிட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்கள் நிறைந்த பகுதிகளில் பாஜகவுக்கு கை கொடுக்கும்.
தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு!
மேலும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வரும் பகுதிகள் ஜாட் - ராஜ்புத் விவசாயிகள் நிறைந்த பகுதி. ஜாட்டுகள் பொதுவாக காங்கிரஸ் வாக்காளர்களாக இருந்தனர். ஆனால் 2014 தேர்தலில் பாஜகவுக்கு அந்த வாக்குகள் சென்றன. ராஜ்புத் சமூகம் பொதுவாக பாஜக ஆதரவாளர்கள்தான்.
நகோர் தொகுதியைப் பொறுத்தவரையில் ஜாட் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ராஜ்புத்துகளும் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருப்பர். காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் இருவருமே ஜாட் சமூகத்தினராக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஜாட்டுகள் வாக்குகள் பிரிய இருக்கின்றன. ஜாட்டுகள் அல்லாத சமூகத்தினரே வெற்றி தோல்விக்கு காரணமாக இருக்கப் போகிறார்கள்.
பாரத்பூரில் ஜாட், தலித்துகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் குமார் ஜாதவுக்காக அமைச்சரும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான விஸ்வேந்தர் சிங் களத்தில் வேலை செய்தார். அதேநேரத்தில் பாஜகவின் ரஞ்சீதா கோஹ்லியின் பிரசாரம் பெரிய அளவில் எடுபடவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆல்வார் தொகுதியில் மாஜி மத்திய அமைச்சர் பன்வார் ஜிதேந்திரசிங்கை காங்கிரஸ் களம் இறக்கியிருக்கிறது. பாஜகவோ ஹரியானாவில் மகந்த் பாலக் நாத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஜிதேந்திரா சிங், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் நாத் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜ்புத் சமூக வாக்குகள் பாஜகவுக்கு மட்டுமே கிடைத்த நிலையில் இம்முறை ஜிதேந்திர சிங் அதை பிரிக்க இருக்கிறார். யாதவ் சமூகத்தினர் 17% இத்தொகுதியில் உள்ளனர். இருப்பினும் தலித்துகள், முஸ்லிம்கள் மொத்தம் 12% பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்புவரை காங்கிரஸ் கோட்டைதான். தற்போதைய சூழ்நிலையில் வாக்காளர்களிடையே நிலவுகிற கனத்த மவுனம் நிச்சயம் பிரதமர் மோடிக்கு ஆதரவானது இல்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.