தமிழ் மொழியால் நம் நாட்டிற்கே பெருமை.. பிரதமர் மோடி உரை
உலகின் தொன்மையான மொழி தமிழால் நாட்டிற்கே பெருமை என மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: உலக மொழிகளில் தமிழ்மொழிதான் மிகவும் தொன்மையானது என்பது இந்தியாவிற்கே பெருமை என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்தியா வானொலியில் மன் கி பாத் என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார்.
ஒவ்வொரு முறையும் முக்கிய பிரச்சனை குறித்து பிரதமர் உரை நிகழ்த்துவார். அதன்படி இன்று அவர் ஆற்றிய உரையில் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி எடுத்துரைத்திருக்கிறார். அத்துடன் ஆசிரியர் தினம், தேசிய விளையாட்டுக்கள் தினம் உள்ளிட்டவற்றைகளுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை சொன்னார்.
இந்தியாவுக்கே பெருமை
இன்று ரக்ஷா பந்தன், ஜென்மாஷ்டமிக்கான தனது வாழ்த்துக்களுடன் இந்த உரையை துவக்கினார் மோடி. பின்னர் அவர் பேசும்போது, "ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் உள்ளது. தமிழ் மொழி உலகின் மிக தொன்மையான மொழி என்பதில் இந்தியாவுக்கு பெருமையாக உள்ளது. அதைபோல வேதகாலத்திலிருநது இப்போது வரை சமஸ்கிருத மொழியும் ஞானத்தை பரப்ப பெரிய பங்களிப்பை தந்து வந்திருக்கிறது.
ஆசிரியர் தின வாழ்த்து
சிறந்த சிந்தனையாளரும், தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவருமான ராதாகிருஷ்ணனை நாம் எப்போதும் நினைவில் கொள்கிறோம். அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடி வருகிறோம். எனவே வரவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
தோளோடு தோள் நிற்கிறார்கள்
கேரள வெள்ளத்தில் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம். வீடு, உடைமைகளை இழந்தவர்களின் துயர்களை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய துக்கத்தை நம்மால் முழுவதுமாக துடைக்க முடியாது. ஆனாலும், அவர்களின் துயரில் இருக்கும் அம்மக்களுக்கு 125 கோடி இந்தியர்களும் தோளோடு தோள் நிற்கிறார்கள். அந்த இயற்கை சீற்றத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
விரியும் மனிதாபிமானம்
பேரிடரின்போது, மனிதாபிமானத்தின் காட்சி விரிவதை நம்மால் பார்க்க முடிந்தது. ராணுவ வீரர்கள்தான் கேரளத்தின் மீட்பு பணியின் நாயகர்களாக விளங்கினார்கள். விமானப்படை, தரைப்படை, கடற்படி, பாதுகாப்பு படை, விரைவுபடை என இந்த இயக்கத்தில் அவர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக பேரிடர் மேலாண்மை படையினர்தான் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தேசிய விளையாட்டுக்ள தினம் கொண்டாட உள்ளோம். இந்த வேளையில் அனைத்து விளையாட்டு பிரியர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
முத்தலாக் சட்டம்
சிறந்த நிர்வாகத்தை அறிமுகப்படுத்திவர் வாஜ்பாய். வளர்ச்சி பாரதம் என்ற வாஜ்பாயின் கனவை நனவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ள அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை இந்திய சமூகம் ஒருபோதும் ஏற்காது. அதனால்தான் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது" இவ்வாறு மோடி உரையாற்றினார்.