"பாஜக செஞ்சுரி போட்டாச்சு.. தீதி கிளீன்போல்டு.. வீட்டுக்கு போக வேண்டியதுதான்".. பிரதமர் மோடி அட்டாக்
மம்தா பானர்ஜி மீது சரமாரி விமர்சனத்தை முன்வைத்தார் பிரதமர் மோடி
கொல்கத்தா: "தீதியின் மனக்கசப்பும், கோபமும் தினமும் அதிகமாயிட்டே வருகிறது.. நீங்கள் எத்தனையோ பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்திருக்கிறீர்கள், ஆனால், பாஜக ஏற்கனவே ஒரு சதம் அடித்து விட்டது... உங்கள் மமதையையும், வன்முறையையும், பண மழை கலாச்சாரத்தையும் இந்த மாநிலம் சகித்து கொள்ளாது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் மக்களை பாதுகாக்கும் மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம்" என்று மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்க தேர்தல் இந்தியாவில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் இதுவரை வலிமை பெற்று வந்துள்ளது.. இந்த மாநிலத்தில் எவ்வளவோ முயற்சித்தும், பாஜகவால் ஓரளவுகூட செல்வாக்கை பெற முடியாத நிலைமையே இதுவரை இருந்து வந்தது.
ஆனால், இந்த முறை தன்னுடைய ரூட்டை மாற்றி களம் இறங்கி உள்ளது பாஜக.. தன் பாணி அரசியலை இங்கு நடைமுறைப்படுத்தி வருகிறது.. இதனால் பாஜகவின் காய் நகர்த்தல்களை கண்டு, மம்தா அரசு சற்று கலங்கி போய் உள்ளது. அந்த வகையில், தற்போது ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்துள்ளது..
வாக்குப்பதிவு
நேற்றுமுன்தினம் அங்கு 4-வது கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, கூச் பெஹார் மாவட்டத்தின் சிட்டல்குச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பெரும் வன்முறை ஏற்பட்டது.. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்... இதில் குண்டுபாய்ந்து 5 பேர் பரிதாபமாக சரிந்து விழுந்து உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
ஆத்திரம்
இதனால் ஆத்திரமுற்ற உள்ளூர் மக்கள், மத்திய படையினரை சூழ்ந்து கொண்டு மிரட்டியதாகவும், அவர்களின் துப்பாக்கிகளை பறித்ததால்தான், தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறங்கியதாகவும் போலீசார் காரணம் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. தேர்தல் கமிஷனும் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளது... இந்த மாவட்டத்தில் எந்த கட்சி தலைவரும் நுழைய 72 மணி நேர தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மம்தா
இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.. அங்கே ஒரு இனப்படுகொலை நடந்துள்ளது.. மக்களை குறி பார்த்துதான், மத்திய படைகள் துப்பாக்கி தோட்டாக்களை வீசியிருக்கிறார்கள்.. ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்றுகூட மத்திய படைகளுக்கு தெரியாதா? மத்திய படைகளில் ஒரு பிரிவினர் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று முதற்கட்ட வாக்குப்பதிவில் இருந்தே நான் சொல்லி வருகிறேன்.
வன்முறை
இதையேதான், நந்திகிராமிலும் கண்டுபிடித்து சுட்டிக்காட்டினேன்.. ஆனால் என் பேச்சை யாருமே கேட்கவில்லை.. நமக்கு ஒரு தகுதியற்ற உள்துறை அமைச்சரும், தகுதியற்ற மத்திய அரசும் வாய்த்திருக்கிறார்கள்... வருகிற 14-ந் தேதிக்குள் வன்முறை நிகழ்ந்த சிட்டல்குச்சிக்கு போக போகிறேன்.. ஆனால் அதற்குள் அங்கே நுழையவே கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டனர்.. இதன்மூலம் தேர்தல் கமிஷன் உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது' என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி இருந்தார்.
பிரச்சாரம்
மம்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி இன்று பதில் சொல்லி உள்ளார். 5வது கட்ட தேர்தலுக்காக பர்தமான் மாவட்டத்தில், பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசியது இதுதான்: "இதுவரை நடந்த 4 கட்ட வாக்கெடுப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டு விட்டது... தீதியின் மனக்கசப்பும், கோபமும் நாள்தோறும் அதிகமாயிட்டே வருகிறது.. வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சுரி அடித்துள்ளது. மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்.
எஸ்சி சமூகம்
தீதியின் கட்சிக்காரர்கள், இந்த மாநிலத்தின் எஸ்சி சமூகத்தை அவமானப்படுத்தும் விதமாக"பிச்சைக்காரர்கள்" என்கிறார்கள்.. இப்படிப்பட்ட கசப்பான வார்த்தைகளை கேட்டு, அம்பேத்காரின் ஆத்மா காயப்படும்.. புண்படும்.. தீதி தன்னை ஒரு 'ராயல் வங்காள புலி' என்று சொல்லி கொள்கிறார்.. ஆனால், எஸ்சிக்கள் குறித்த இத்தகைய கருத்துக்களை, எந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தீதியின் விருப்பம் இல்லாமல் பேசி இருக்க முடியாது.
கண்ணியம்
மத்தா அவர்களே, உங்களுக்கு யார் மேல கோபம்? நான் இங்கே இருக்கேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, எப்படி விரும்புகிறீர்களோ, அப்படியே என் மேல உங்க கோபத்தை காட்டுங்க.. ஆனால் ஒன்று, வங்காளத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் மட்டும் அவமதிக்காதீங்க.. உங்கள் மமதையையும், வன்முறையையும், பண மழை கலாச்சாரத்தையும், இந்த மாநில மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் மக்களை பாதுகாக்கும் மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம்.
கொலை
2 நாளைக்கு முன்னாடிகூட, தன் பணியினை செம்மையாக செய்த வங்காளத்திற்கு வந்த துணிச்சலான போலீஸ் அதிகாரி அடித்து கொல்லப்பட்டார்... அவங்க அம்மா, மகனின் சடலத்தை பார்த்து, அந்த அதிர்ச்சியிலேயே இறந்தும் விட்டார்.. ஏன் தீதி, அந்த அதிகாரியின் அம்மா உங்களுக்கும் ஒரு அம்மாதானே? நீங்க இந்த அளவுக்கு கடுமையானவர் என்பதும், கொஞ்சம்கூட இரக்கமற்றவர் என்பதும் இந்த வங்காளத்தில் உள்ள எந்த ஒரு தாய்க்கும் தெரியாது" என்று பிரதமர் பேசினார்.