மதத்தின் பெயரிலான வன்முறைகள் சொந்த மதத்தின் மீதான தாக்குதல்களே- பிரதமர் மோடி
டெல்லி: மதத்தின் பெயரில் நடத்தப்படும் வன்முறைகள், சொந்த மதத்தின் மீதே நடத்தப்படும் தாக்குதல்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இஸ்லாமிய பாரம்பரியம் என்பது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மதத்தின் பெயரில் சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. தான் சார்ந்த மதத்தின் மீதே தாக்குதல் நடத்தி கொள்கின்றனர்.
உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் புழங்கும் நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஒரு கையில் குரானையும், மறுகையில் கம்ப்யூட்டரையும் வைத்துக் கொள்கின்றனர்.
மதத்தின் மீது இளைஞர்கள் தீவிரமாக இருந்து அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட முடியும் என்றார் அவர்.
இந்த கருத்தரங்கில் ஜோர்டான் அரசர் அப்துல்லாவும் கலந்துகொண்டார். அப்துல்லா பேசுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது என்பது முஸ்லிம்களுக்கு எதிராக போராடுவதோ அல்லது குறிப்பிட்ட மதத்தை எதிர்த்து போராடுவதோ அல்ல. வன்முறையாளர்கள் மீது நடத்தப்படும் போராட்டம் ஆகும் என்றார் அவர்.