அழகி போட்டியில் பிரதமர் மோடி பற்றி கேள்வி.. நாகலாந்து அழகி அதிர்ச்சி பதில்.. வைரல் வீடியோ
கொஹிமா: மாடுகளை விட பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள் என பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு நாகலாந்து மாநில அழகி போட்டியில் 2வது இடம் பிடித்த விகானுவோ சாச்சு என்ற அழகி பதில் அளித்து அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகலாந்து மாநிலத்தில் "மிஸ் கொஹிமா" என்ற அழகி போட்டி வெகுபிரசித்தம். இந்த அழகி போட்டி அங்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தபோட்டியில் வென்று அழகி படத்தை கைப்பற்ற அந்த ஊர் பெண்களிடையே மிகவும் ஆர்வம் அதிகம்.
இந்நிலையில் 2019ம்ஆண்டுக்கான "மிஸ் கொஹிமா" அழகி போட்டி நாகலாந்து தலைநகர் கொஹிமாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி நடந்தது. இந்த விழாவில் இறுதி சுற்றில் 12 பெண்கள் பங்கேற்று இருந்தனர். இதில் கிரியெனுவோ லீஜிட்சு என்ற அழகி "மிஸ் கொஹிமா" படத்தை வென்றார். 2 வது இடத்தை விகானுவோ சாச்சு என்ற அழகி பிடித்தார்.
இந்த போட்டியில் பங்கேற்ற பெண்களிடம் பல்வேறு கேள்விகளை நடுவர்கள் எழுப்பினர். அப்படித்தான் இரண்டாவது இடம் பிடித்த 18 வயதாகும் விகானுவோ சாச்சுவிடம் பிரதமர் மோடி உங்களை அழைத்து பேசினார் என்ன கூறுவீர்கள் என கேட்டார்கள்.
இதற்கு அந்த பெண் சற்றும் தாமதிக்காமல், "பிரதமர் அவர்களே. மாடுகளை விட பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள்" என்று கூறுவேன் என்று பதில் அளித்தார். இதை கேட்டு வியந்த நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மாடுகளின் பெயரில் மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி நாகலாந்து அழகி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.