மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஹரியானா சென்ற மோடி
பரீதாபாத்: டெல்லிக்கும் ஹரியானா மாநிலம் பரீதாபாத்திற்கும் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதே ரயிலில் ஏறி பரீதாபாத் வந்து சேர்ந்தார்.
பத்ராபூர் - பரீதாபாத் இடையிலான ரயில் பாதை இது. இன்று இது தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் தினசரி 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
13.87 கிலோமீட்டர் தொலைவிலான இந்த மார்க்கத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன. இது டெல்லி மெட்ரோவின் வயலட் லைனின் விரிவாக்கம் ஆகும்.
இந்தப் பாதையானது இதற்கு முன்பு ஐடிஓ முதல் பத்ராபூர் வரை இருந்தது. தற்போது பரீதாபாத் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2500 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் மார்க்கத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அதே ரயிலில் அவர் பரீதாபாத் பயணித்தார்.
அதன் பின்னர் பரீதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பரீதாபாத் விளையாட்டு வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.