அமைச்சரவை கூட்டம் நிறைவு.. காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முக்கிய முடிவு
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பதற்றமான நிலை நீடிப்பதால் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவையின் அவரச கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களை காட்டி கடந்த வாரம் திடீரென மத்திய அரசு ராணுவ படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது. முதலில் 10 ஆயிரம் வீரர்களை காஷ்மீருக்கு மத்திய அரசு அனுப்பியது. அதன் பின்னர் 28 ஆயிரம் வீரர்களை கூடுதலாக அனுப்பியது.
இதற்கிடையே அமர்நாத் யாத்திரை பக்தர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து யாத்திரையை ரத்து செய்து அனைவரையும் உடனே காஷ்மீரை விட்டு வெளியேறு மாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு.. வீட்டுக்காவலில் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி
அனைவரும் வெளியேற உத்தரவு
இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைத்து வெளிநமாநிலங்களை சேர்ந்தவர்களையும் காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது. விமான நிறுவனங்கள் சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளன.
மத்திய அரசு விளக்கம்
ராணுவம் குவிக்கப்படுவததோடு, வெளிமாநில மக்கள் வெளியேற்றப்படுவதாலும் காஷ்மீர் மக்களிடம் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. எல்லையில் பதற்றம் நிலவுவதால் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பீதி
ஆனால் காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பதால் தான் இப்படி அனைவரையும் வெளியேற்றுவதாக பீதி கிளம்பியுள்ளது.
அமித்ஷா நேற்று ஆலோசனை
இந்நிலையில் காஷ்மீரில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். ஒரு மணி நேர ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் குறித்து முக்கிய முடிவு
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய பாதுகாப்பு அமைச்சரவையின் அவசர ஆலோசனை கூடடம் இன்று காலை9.30 மணி அளவில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார். அனேகமாக சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரமாகவும் மாநிலங்கள் பிரிப்பு குறித்த விவரமாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.