பிரதமர் மோடியை வரவேற்க தயாராகும் சிலிக்கான்வேலி ... ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்துக்கும் செல்கிறார்!
டெல்லி: அயர்லாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டு செல்கிறார். அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் அந்நாட்டு அதிபர் ஒபாமாவையும் சந்தித்து பேசுகிறார். சிலிக்கான்வேலியில் பிரதமர் மோடி அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார்.
அயர்லாந்தில்...
பிரதமர் நரேந்திர மோடி முதல் கட்டமான நாளை மறுநாள் (செப்டம்பர் 23) அயர்லாந்து செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் 60 ஆண்டுகளில் அயர்லாந்து செல்வது இதுவே முதல் முறையாகும்.
அந்நாட்டின் பிரதமர் என்டா கென்னியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் அயர்லாந்து வாழ் இந்தியர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அயர்லாந்து நாட்டுடனான இருதரப்பு உறவு மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்படும்; அயர்லாந்தில் இந்தியர்களிடையே நான் உரையாற்ற உள்ளேன் என்று கூறியுள்ளார்.
வரலாற்று தருணம்..
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி செப்டம்பர் 24-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவுக்கு 2வது முறையாக பிரதமர் மோடி செல்கிறார். அங்கு நியூயார்க் நகரில் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி மாநாட்டில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஐ.நா. 70வது ஆண்டை கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நான் அமெரிக்கா செல்கிறேன். அதேபோல் ஒபாமா தொடங்கி வைக்கும் ஐ.நா. அமைதிகாக்கும் பணி தொடர்பான மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
பின்னர் இந்தியா முன்னின்று நடத்தும் ஜி-4 நாடுகள் மாநாட்டை நியூயார்க்கில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரேசில், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
ஒபாமாவுடன்...
ஐ.நா. சபை நிகழ்ச்சியின் இடையே அவர் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவார். ஒரே ஆண்டில் ஒபாமாவை மோடி 3-வது முறையாக சந்தித்து பேசுகிறார்
இந்த சந்திப்பின்போது இரு தரப்பு ராணுவ வர்த்தக தொழில் நுட்ப முயற்சி, அணு சக்தி ஒப்பந்த முன்னேற்றம், எரிசக்தி, உலகளாவிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
சி.இ.ஓக்களுடன்...
பிரதமர் மோடி நியூயார்க்கில் தங்கி இருக்கும்போது அங்குள்ள வால்ட்ரப் ஆஸ்டாரியா ஹோட்டலில் அமெரிக்காவின் 50 முன்னணி தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இந்த இரவு விருந்துடன் கூடிய சந்திப்பில் ஃபோர்டு கார் நிறுவன தலைவர் மார்க் பீல்ட்ஸ், பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைவர் மெரிலின் ஏ ஹியூசன், ஐ.பி.எம். நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜின்னி ரோமெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
33 ஆண்டுகளுக்கு பின்னர்...
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26-27 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர், தொழில்நுட்பத் துறையின் தாயகமாக இருக்கும் இந்த மேற்கு கரை பகுதிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சிலிக்கான்வேலியில் இந்தியர்களுடன்..
சான்பிரான்சிஸ்கோவின் சிலிக்கான்வேலியில் சான் ஜோசில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் (https://www.pmmodiinca.org) பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள். அந்த வரவேற்பை ஏற்று அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மொத்தம் 313 அமைப்புகள் இணைந்து பிரதமர் மோடி பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இதில் அமெரிக்கா வாழ் இந்திய பிரபலங்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
சிலிக்கான்வேலியில் 27-ந் தேதி முதலாவது இந்திய-அமெரிக்க ஸ்டார்ட் அப் கனெக்ட் (India-US Startup Konnect) நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாஸ்காம், அகமதாபாத் ஐ.ஐ.எம்., உள்ளிட்டவை செய்து வருகின்றன.
ஃபேஸ்புக் தலைமையகத்தில்..
சிலிக்கான்வேலியில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தலைமையகத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு கேள்வி-பதில் நிகழ்ச்சியில் மார்க் ஜூகெர்பெர்க்குடன் அவர் கலந்து கொள்கிறார்.
கூகுள் இணையதளத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரையன் லாரி பேஜ், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் முஸ்க் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.