பீட்சா ஒரே ருசிதான்... ஆனால் தமிழ்நாட்டில் தயாராகும் இட்லி பலவிதமான சுவை கொண்டது - மோடி
டெல்லி: டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி தமிழ்நாட்டு இட்லியை பீட்சாவோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
'மை கவ்' ஆப் 2வது ஆண்டுவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடந்த விழாவில பிரதமர் மோடி பங்கேற்றார். மோடியை நேரடியாக மக்கள் தொடர்பு கொள்வதற்காக 'மை கவர்மென்ட்' என்ற ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆப்சை தொடர்ந்து பயன்படுத்தும் மக்கள், மோடியை நேரடியாக சந்தித்து தங்களின் கருத்தை தெரிவிப்பதற்காகவும், பிரதமருடன் ஆலோசனை நடத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பேசிய மோடி, பசு பாதுகாப்பு தொழில் செய்வோர் என்னை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிலர் இரவு நேரங்களில் இது போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கடைகளை திறந்துள்ளனர்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் கடைகளை நடத்துபவர்கள் குறித்து ஆவணங்களை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பசுக்கள் கொல்லப்படுவதால் சாவதில்லை. பசுக்கள் இயற்கை மாசுபாடுகளால் உயிரிழக்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உண்பதால் பலியாகின்றன. இந்த பசு பாதுகாப்பு அமைப்புகள் பிளாஸ்டிக் பொருட்களை தெருவில் வீச வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தால் அதுவே மிகப்பெரிய சேவை என கூறினார்.
மேலும், உணவு குறித்தும் அதன் பாதுகாப்பு மற்றும் தொழில்வளம் குறித்து மோடி பேசும் போது தமிழ்நாட்டு இட்லியை அமெரிக்காவில் உள்ள பீட்சாவோடு ஒப்பிட்டு பேசினார்.
Pizza Hutல் தயாராகும் பீட்சா ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் கூட ஒரே ருசியுடன் தான் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் தயாராகும் இட்லி பலவிதமான சுவைகளுடன் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய உணவு வகைகளை நல்ல முறையில் தயாரித்து அதனை சிறந்த முறையில் சந்தையில் விற்றால் இந்தியாவை பார்த்து உலகமே வியக்கும் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் மோடி கூறினார்.
வி்சேஷம் என்னவென்றால் மேற்கு இந்தியாவிலிருந்து வந்தவரான மோடி காலையில் தினசரி சாப்பிடுவது தென்னிந்திய உணவு வகைகளாம். அதாவது இட்லி, தோசை போன்றவற்றைத்தான் காலையில் விரும்பிச் சாப்பிடுகிறாராம் மோடி.