இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் மெர்க்கலை ட்விட்டர் மூலம் வரவேற்ற மோடி
டெல்லி: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லிக்கு வந்தார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு வந்தார். அவருடன் ஜெர்மனி கேபினட் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் வந்துள்ளது. விமான நிலையத்தில் மெர்க்கல் மற்றும் அவரது குழுவை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வரவேற்றார்.
Namaste Chancellor Merkel! Warm welcome to you & the delegation. I look forward to fruitful discussions & strengthening India-Germany ties.
— Narendra Modi (@narendramodi) October 4, 2015
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நமஸ்தே அதிபர் மெர்க்கல்! உங்களையும், உங்கள் குழுவையும் வரவேற்கிறேன். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவை பலப்படுத்துவது பற்றி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மெர்க்கல் மற்றும் மோடி இன்று இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பாதுகாப்பு, இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேச உள்ளனர். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் பற்றியும் அவர்கள் பேச உள்ளனர்.
மோடியும், மெர்க்கலும் நாளை பெங்களூரில் நடக்கும் நாஸ்காம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். மெர்க்கல் அடுகோடியில் உள்ள பாஷ் நிறுவனத்திற்கு செல்கிறார். அப்போது அவருடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் செல்கிறார்.
மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனி சென்றார். இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஜெர்மனி 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.