சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்
வயநாடு: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி சீனா குறித்து எதுவுமே பேசமாட்டார் என உறுதியாக தாம் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தாம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முக்கியமான செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு குறித்து?
பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி பொது இடங்களில் கூடி வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்குவார் என கூறப்படுகிறது.
ராகுல் சொல்வது என்ன?
இதனிடையே கேரளாவின் வயநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக கூறியதாவது: இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் சீனா எப்போது வெளியேறும் என்பதை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.
சீனா பற்றி சொல்லமாட்டார் மோடி
இதேபோல் தமது நாட்டின் நிலப் பகுதியை அண்டை நாடு ஆக்கிரமித்திருக்கும் நிலையில் ஒரு பிரதமர் பேசாமல் இருப்பது என்பது உலகில் வேறு எந்த ஒருநாட்டிலும் நடக்காது. பிரதமர் மோடி இதுபற்றி பேசியாக வேண்டும். ஆனால் இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே பேசும் மோடி இது குறித்து எல்லாம் பேசப்போவதில்லை என்பதுமட்டும் உறுதி.
கமல்நாத் சர்ச்சை
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ஐட்டம் என பாஜக தலைவரை விமர்சித்தது பேசியது ஏற்புடையது அல்ல. துரதிருஷ்டவசமானது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். ஆனால் தாம் பேசியதன் பின்னணி குறித்து விளக்கிவிட்டதால் மன்னிப்பு கேட்க முடியாது. ராகுல் காந்தி சொந்த கருத்தை கூறியுள்ளார் என கமல்நாத் பதில் கொடுத்திருக்கிறார்.