3 நாடுகள் சுற்றுப்பயணம் தொடங்கியது.. முதல் நாடாக போர்ச்சுகல் சென்றார் பிரதமர் மோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்க உள்பட 3 நாடுகள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதல் நாடாக போர்ச்சுகல் நாட்டிற்கு இன்று சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற் கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டாவை மோடி சந்தித்து பேச உள்ளார்.
அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் முக்கிய பேச்சு நடத்துகிறார்கள். வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து மோடி நாளை மற்றும் நாளை மறுதினம் அமெரிக்கா செல்கிறார். அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு 27ம் தேதி நெதர்லாந்து செல்கிறார்.