கங்கை நதியை தூய்மைப்படும் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர்
வாரணாசி: வாரணாசியில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார்.
வாரணாசியில் மத்திய ஜவுளித்துறை சார்பில் ரூ.147 கோடி செலவில் அமைக்கப்படும் நெசவாளர் வர்த்தக மையம், கைவினைப் பொருட்கள் அருங்காட்சியகம், விசைத்தறி சேவை மையம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன் பிறகு எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் வாரணாசி தொகுதியில் ஜெயப்பூர் கிராமத்தை மோடி தத்தெடுத்தார்.
2-ம் நாளான இன்று காலை பிரதமர் மோடி கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக வாரணாசியில் கங்கை நதி ஓடும் ‘அச்சிகாட்' என்ற இடத்துக்கு காரில் வந்து இறங்கினார்.
கங்கைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார். அதன் பிறகு கங்கை ஆற்றில் சிறிது தூரம் மணலில் நடந்து சென்றார். அங்கு பெரிய மண் குவியலை மண்வெட்டி மூலம் அகற்றி கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, நான் இன்று கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்துள்ளேன். இது மற்றவர்களையும் இந்தப்பணியில் ஈடுபட வைக்கும் தூண்டு கோலாக இருக்கும் என்றார்.
கங்கை நதியை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்துக்காக 9 பேர் குழுவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், நடிகரும் அரசியல்வாதியுமான மனோஜ் திவாரி, எழுத்தாளர் மனிர்மா, கிரிக்கெட் வீரர்கள் முகமது கயீப், சுரேஷ் ரெய்னா, நகைச்சுவை நடிகர் ராஜீ ஸ்ரீவத்சவா, பின்னணி பாடகர் கைலாஷ் கேர், சித்ரகோட் பல்கலைக் கழக துணை வேந்தர் ராம்பத்ராசார்யா, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பேராசிரியர் தேவி பிரசாத் திவேதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.