மர்மங்கள் அவிழ்கிறது.. நேதாஜி பற்றிய 100 ஆவணங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!
டெல்லி: நேதாஜியின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அவர் குறித்த 100 ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான சுபாஷ் சந்திரபோஸ் 1945ல் தைவானில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக இங்கிலாந்து நாட்டு வெப்சைட் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் அவரது மரணம், தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. அவரது மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என அவரது குடும்பத்தினர், அரசுக்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நேதாஜி குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி, நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து சுமார் 33 ஆவணங்களை தேசிய காப்பகத்துக்கு பிரதமர் அலுவலகம் வழங்கியது. பின்னர் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களும் சில ஆவணங்களை வழங்கின.
இவ்வாறு வழங்கப்பட்ட சுமார் 100 ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கி வெளியிட தேசிய காப்பகம் நடவடிக்கை எடுத்தது. நேதாஜியின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, இந்த ஆவணங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
மோடி வெளியிட்ட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 100 ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு தேசிய ஆவண காப்பகம் வைத்தது. இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் உறவினர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். மாதம் தோறும் 25 ஆவணங்களை வெளியிடவும் தேசிய ஆவண காப்பகம் முடிவு செய்துள்ளது.
இன்றைய நாள் சிறப்பானது என்று, இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டில் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.