இன்று 74-வது பிறந்தநாள்.. அமிதாப் வீட்டில் குவிந்த ரசிகர்கள் !
மும்பை: பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தனது 74-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தனது 74-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அவருடைய வீட்டின் எதிரில் ஏராளமான ரசிகர்கள் கூடி கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப்பச்சன், தனக்கு வாழ்த்து கூறிய அனைவரும் நன்றி தெரிவித்தார்.
மேலும் நாட்டின் எல்லைப்பகுதியில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் கவலை அளிப்பதாகவும், சமீபத்தில் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் அளித்த பதிலடி ஆறுதலும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அடுத்த ஜனாதிபதியாகும் தகுதி எனக்கு (அமிதாப்) உண்டு என்று கூறியிருக்கும் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் கருத்து தனக்கு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.
மோடி வாழ்த்து:
அமிதாப் பச்சனின் 74-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில், 'அன்புக்குரிய அமிதாப் பச்சனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடக்கமான குணநலனாலும் பன்முகத்திறமையாலும் பல அபிமானிகளை பெற்றுள்ள நீங்கள் உடல்நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Dear @SrBachchan, wishing you a very happy birthday. Your versatility & humility has many admirers. Praying for your long & healthy life.
— Narendra Modi (@narendramodi) October 11, 2016
இதேபோல், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.