மோடி ஒரு சுற்றுலா பிரதமர்: மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுற்றுலா பிரதமர் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுற்றுலா பிரதமர். அவருக்கு நாடாளுமன்றத்திற்கு வர நேரம் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் உரையாற்ற மட்டும் நேரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதிக்கையில் அவர் வரவில்லை. எதிர்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தபோது அவர்களை அழைத்து பேசி தீர்வு காணவில்லை.
மோடி
அவைக்கு வரவும், அவரது கேபினட் அமைச்சர்கள் மீதான புகார்கள் பற்றி பேசவும் அவருக்கு நேரம் இல்லை. ஆனால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா சென்று அங்கு பேசுவார். துபாய் சென்று அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மணிக்கணக்கில் பேசியுள்ளார்.
பிரதமர்
வெளிநாடுகளுக்கு சென்று முன்னாள் இந்திய பிரதமர்கள் ஏன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யவில்லை என்று பேசுவார். அவர் ஒரு சுற்றுலா பிரதமர். ஓராண்டு மற்றும் நான்கரை மாதங்களில் 25 நாடுகளுக்கு சென்றுள்ளார். வேறு எந்த பிரதமராவது இவ்வாறு சென்றுள்ளாரா?
பயணம்
அவர் 3 முதல் நான்கு நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கனடா, பிரேசில் உள்ளிட்ட தொலைதூர நாடுகளுக்கும் செல்கிறார். அலுவலகத்தில் இருந்து கொண்டு நாடாளுமன்றத்திற்கு வராமல் உள்ளார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல 20 நாட்களாக வரவில்லை.
பீகார்
பீகாரில் தேர்தல் வர உள்ள நேரத்தில் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கியிருப்பது அரசியல் வித்தை ஆகும். இந்த நிதியை அவர் பட்ஜெட்டின்போது அறிவித்திருக்க வேண்டியது தானே. தேர்தல் நேரத்தில் என்ன சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.
பெங்களூர்
எஸ்.எம். கிருஷ்ணா ஆட்சியில் தான் பெங்களூர் இந்தியாவின் ஐடி தலைநகர் ஆனது. பூங்கா நகரமான பெங்களூரை பாஜக குப்பை நகரமாக்கிவிட்டது. வரும் 22ம் தேதி நடக்கும் பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார் கார்கே.