மத்திய அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்களை சேர்க்க பிரதமர் மோடி முடிவு!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்களை சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 45 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இது மத்திய அரசின் மிகச் சிறிய அமைச்சரவையாக கருதப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் சிலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அருண் ஜெட்லியிடம் நிதி இலாகாவும், பாதுகாப்பு துறையும் உள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட இலாக்கா
அதுபோல வெங்கய்யா நாயுடு, நிதின்கட்காரி, ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவேத்கர் உள்பட மேலும் சில அமைச்சர்களிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. இதனால் மத்திய அமைச்சர்களில் பலர் நிர்வாக சுமையால் தவித்தபடி உள்ளனர்.
அமைச்சரவை மாற்றம்
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்து அதிருப்தியுடன் உள்ளனர். எனவே மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
வெளிநாட்டு பயணம்
கடந்த 3 மாதமாக அவர் தொடர்ந்து வெளி நாட்டு பயணங்கள் மேற் கொண்டதால் மத்திய அமைச்சரவையை மாற்ற இயல வில்லை. ஆனால் தற்போது மத்திய அமைச்சரவையை மாற்ற வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஆலோசனை
இதையடுத்து மத்திய அமைச்சரவையை மாற்றி அமைப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைத்து விடலாம் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
5 புதிய அமைச்சர்கள்
மாற்றப்படும் அமைச்சரவையில் 5 பேர் கூடுதலாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 5 பேருக்கும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது.