கடும் எதிர்ப்புக்கு இடையே கொல்கத்தா வந்த மோடி.. சி.ஏ.ஏ கூடாது.. நேரில் சென்று சொன்ன மமதா பானர்ஜி
கொல்கத்தா: அரசியலில் ஒருவருக்கொருவர் சிம்ம சொப்பனமாக விளங்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகிய இருவரும், கொல்கத்தாவில் இன்று நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, நிருபர்களிடம் மமதா பானர்ஜி கூறுகையில், "மேற்கு வங்கத்தில் உள்ள மக்கள் என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) மற்றும் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் (சி.ஏ.ஏ) ஆகியவற்றை ஏற்கவில்லை என்று நான் பிரதமரிடம் தெரிவித்தேன். நீங்கள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன். ஆனால், பிரதமர், நான் அரசு திட்டங்களுக்காக இங்கே வந்து இருக்கிறேன், எனவே நீங்கள் டெல்லிக்கு வாங்க. விவாதிப்போம் என்று அவர் கூறினார்" இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட, விக்டோரியா மெமோரியல் ஹால் போன்ற, நான்கு பாரம்பரிய கட்டிடங்களை பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
West Bengal: PM Narendra Modi meets CM Mamata Banerjee in Kolkata. The PM is in Kolkata to take part in 150th anniversary celebrations of the Kolkata Port Trust. pic.twitter.com/gzm2ohEZ9U
— ANI (@ANI) January 11, 2020
இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவு மற்றும் இடது முன்னணியினர் மேற்கு வங்கம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இடது முன்னணி ஆர்வலர்கள், 'கோ பேக் மோடி' போன்ற வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி, டம் டம் பகுதியில் பேரணிகளை நடத்தினர்.
#WATCH: PM Narendra Modi meets West Bengal CM Mamata Banerjee in Kolkata. The Prime Minister is in Kolkata to take part in 150th anniversary celebrations of the Kolkata Port Trust. pic.twitter.com/6r6ghcLlSu
— ANI (@ANI) January 11, 2020
இது விமான நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியா. அங்கு பிரதமர் வந்தவுடன் கோஷங்கள் இன்னும் அதிகரித்தன. "குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாவிட்டால், நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தொடருவோம். நரேந்திர மோடி கொல்கத்தாவுக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் இது எங்கள் மாநிலத்தின் சூழ்நிலையை மோசமாக்கும்" என்று ஒரு போராட்டக்காரர் கூறினார்.