இலவசங்கள் மோசமானவை.. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் சுமை.. பிரதமர் மோடி பேச்சு!
பானிபட் : சுயநல அரசியல் செய்பவர்கள் தான் இலவச பெட்ரோல், டீசல் போன்ற திட்டங்களை அறிவிப்பார்கள். இதனால், நாடு தன்னிறைவு பெறாது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Recommended Video
சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பிளாக் மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. கறுப்பு ஆடையை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கையை போக்கலாம் என நினைக்கிறார்கள் என கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை சாடியுள்ளார் பிரதமர் மோடி.
கறுப்பு டிரெஸ் மேஜிக் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற முடியாது.. காங். மீது பிரதமர் மோடி கடும் அட்டாக்
எத்தனால் ஆலை திறப்பு
பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2ஜி எத்தனால் ஆலையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "இயற்கையை வழிபடும் நம் நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதில் உயிரி எரிபொருள் முக்கியமானது. இதை நம் விவசாயிகள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். உயிரி எரிபொருள் என்றால் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் பசுமை எரிபொருள். இந்த புதிய ஆலை மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். புதிய வாய்ப்புகள் உருவாகும். கிராம மக்கள், விவசாயிகள் பயன்பெறுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடு சவால்களை குறைக்கும்.
இலவச அறிவிப்புகள்
சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் அறிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளிடம் இருந்து உரிமைகளை பறிப்பதுடன், நாடு தன்னிறைவு பெறுவதை தடுக்கும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும். புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை.
கூட்டுப் பொறுப்பு
அரசிடம் பணம் இல்லை என்றால், எத்தனால் ஆலை, உயிரி எரிவாயு ஆலை மற்றும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுவிடும். நாம் அந்த நிலையில் இல்லை என்றாலும், இந்த நாடு இங்கேயே உள்ளது, இந்த நாட்டில் உள்ள குழந்தைகள், இங்கேயே இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் இதே மனப்பான்மையுடன்தான் பணியாற்றியுள்ளனர். ஒரு தேசம் என்ற முறையில் அதுபோன்ற மனப்பான்மை வளர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என நாம் உறுதியேற்க வேண்டும். இது நாட்டின் கூட்டுப் பொறுப்பு.
இலக்கு
அடுத்த சில ஆண்டுகளில் 75 சதவீதம் வீடுகளுக்கு பைப் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும். எத்தனால் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 40 கோடி லிட்டராக இருந்தது. இன்று 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது. அதே அளவு விவசாயிகளுக்கும் சென்றடைந்துள்ளது. தற்போது நாம் 75-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும் வேளையில், அடுத்த சில ஆண்டுகளில், நாட்டில் உள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்.
பிளாக் மேஜிக்
பிளாக் மேஜிக் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது. கறுப்பு ஆடையை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கையை போக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கையில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியாது. அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் அதுபோன்ற நபர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
குறுக்கு வழி
அரசியல் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை பின்பற்றும் மனப்பான்மை உள்ளவர்களால், எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண முடியாது. குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைத்தட்டல் மற்றும் அரசியல் ஆதாரங்களை பெறலாமே தவிர, பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் பணியை மேற்கொண்டுள்ளது." என உரையாற்றினார்.