சீக்கியர்கள் படுகொலையின் போது ராஜீவ் 'உதிர்த்த முத்து' இதுதான்... மோடியின் அடுத்த வெடி!
ரோக்டாக்(ஹரியானா): தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸுக்கு எதிராக 1980களில் நடைபெற்ற விவகாரங்களை அடுத்தடுத்து அஸ்திவாரமாக வீசுகிறார் பிரதமர் மோடி. தற்போது 1984 சீக்கியர்கள் படுகொலையின் போது அலட்சியமாக ராஜீவ் பதில் அளித்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸை காட்டமாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
லோக்சபா தேர்தல் களத்தில் பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகால தோல்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. 2014 தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் என்னவாயின? என சரமாரியாக கேள்வி எழுப்பின.
இதற்கு பதிலளிக்காமல் தேசப்பற்று, தேசியவாதம் என திசைதிருப்பி வந்தது பாஜக. இதற்கு பதிலடியாக ரஃபேல் விவகாரம், பால்கோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் உண்மை தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டன.
ராஜீவ் மீது புகார்கள்
இதனை மடைமாற்றும் வகையில் ராஜீவ் காந்தி குறித்து வரிசையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் பிரதமர் மோடி. இந்த வரிசையில் தற்போது சீக்கியர்கள் படுகொலை விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
|
சர்ச்சையான ட்வீட்
1984-ல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பிரதமராக இருந்த ராஜீவ்தான் காரணம் என மூத்த வழக்கறிஞர் பூல்கா குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டு வருகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தமது ட்விட்டர், பஞ்சாப் பொற்கோவிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு, சீக்கியர் படுகொலைகளின் போது நடந்த உண்மைகளை மூடி மறைக்கின்றனர் என பதிலளித்திருந்தார்.
காங்கிரஸ் அழியும்
இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்த பதில்: இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஆணவ குணம். இதனால்தான் 44 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இத்தகைய ஆணவத்தால் இன்னும் படுமோசமான தோல்வியையே காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது.
ராஜீவ் உதிர்த்த முத்து
சீக்கியர்கள் படுகொலையின் போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, ஒரு பெரிய ஆலமரம் சாய்கின்ற போது பூமி லேசாக அதிரத்தான் செய்யும் என கருத்து தெரிவித்திருந்தார். அப்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தவர் கமல்நாத். அவர்தான் இப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வர். ஆகையால் சாம்பிட்ரோடோவின் கருத்து தனிப்பட்டதானது அல்ல. அதுதான் காங்கிரஸின் குணமே. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.