பழங்குடியின பெண்ணுக்கு செருப்பு போட கற்றுக் கொடுத்த பிரதமர்: சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி தருணம்
சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின பெண்ணுக்கு செருப்பு போட கற்றுக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பீஜப்பூர்: சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின பெண் ஒருவருக்கு செருப்புகளை போட்டு விட்டு ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.
சத்தீஸ்கரின் பீஜப்பூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பீஜப்பூர் நகரம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு டெண்டு இலைகளை பறிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
மாநிலத்தின் வனத்துறை உற்பத்தி கழகத்தின் சார்பில் குடும்பத்தின் டெண்டு இலைகளை பறிக்கும் ஒருவருக்கு இலவச காலணி வழங்கும் விழா பீஜப்பூரில் நடைபெற்றது.
இதற்காக சனிக்கிழமை இங்கு வந்த பிரதமர், அங்குள்ள பெண்கள், சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தார். இதையடுத்து மாலை நடைபெற்ற விழாவில் மலைவாழ் பெண்களுக்கு காலணி வழங்கப்பட்டது.
அப்போது அந்த விழாவை மறக்க முடியாத சம்பவமாக மாற்ற பிரதமர் திடீரென செய்த காரியத்தால் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. காலில் செருப்பு அணியாமல் வந்த ஒரு பெண்ணுக்கு செருப்பை வழங்கியபோது அதை அவருக்கு போட்டுவிட்டார்.
PM @narendramodi shows yet again why he is a 'Pradhan Sevak' in the true sense! #PMInBastar pic.twitter.com/YHi4qMDvfR
— BJP (@BJP4India) April 14, 2018
யாரும் எதிர்பார்க்காத வகையில் இது நடந்ததால் அனைவரும் ஆச்சரியத்தில் ஆராவாரம் செய்தனர். பழங்குடியின மாவட்டமான பீஜப்பூருக்கு வரும் முதல் பிரதமர் மோடிதான்.
இவர் 4-ஆவது முறையாக சத்தீஸ்கருக்கு வந்துள்ளார். அடுத்த ஆண்டில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.