பிரதமராகி படேல் சிலையை திறப்பேன் என நினைக்கவில்லை... நரேந்திர மோடி நெகிழ்ச்சி !
Recommended Video
அஹமதாபாத் : வல்லபாய் படேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமை கொள்கிறேன். சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்கவில்லை.
குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையில், இன்று வரலாற்றில் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து நான் என்னுடைய உரையை தொடங்குகிறேன். இந்தியா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் பங்கேற்க முன்வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
ஒற்றுமையான இந்தியாவில் நாம் வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திரத்திற்கு பின்னர் அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாகவே இந்தியா இன்று இந்த நிலையில் இருக்கிறது. படேலின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒற்றுமை சிலை இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும். உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைய வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அந்தக் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு படேலின் சிலையை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறேன். இந்த தருணத்தை நான் மிகவும் பெருமையானதாக நினைக்கிறேன். சிலை அமைப்பதற்கான முதல் கல்லை நான் எடுத்துக் கொடுத்தேன். நான் முதல்வராக இருந்த போது படேல் சிலை அமைக்கப்படும் என்று போடப்பட்ட திட்டத்தை நான் பிரதமராக இருக்கும் போது திறந்து வைப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.