கல்லோ மண்ணோ எதை கலந்து ரசகுல்லா கொடுத்தாலும் அது எனக்கு மகா பிரசாதம்.. மம்தாவுக்கு மோடி கவுன்ட்டர்!
Recommended Video
கொல்கத்தா: கல்லாக இருந்தாலும் சரி மண்ணாக இருந்தாலும் சரி எதை கலந்து எனக்கு ரசகுல்லா அனுப்பினாலும் அது மகா பிரசாதம் என மம்தா பானர்ஜிக்கு மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
கொல்கத்தா அருகே சேரம்பூரில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் களிமண்ணையும் கற்களையும் கலந்து எனக்கு ரசகுல்லா அனுப்ப தீதி (மம்தா) விருப்பப்படுகிறார்.
எத்தனை அதிர்ஷ்டசாலி நான். வங்காள மண்ணில் எண்ணற்ற துறவிகளும் சுதந்திர போராட்டத் தியாகிகளும் நடந்துள்ளனர். அந்த மண்ணும் கல்லும் கலந்த ரசகுல்லா மோடிக்கு கிடைத்தால் அது புனிதமான பிரசாதம் ஆகும்.
கடமை
வங்காள மண் புனிதத்தன்மை கொண்டது, உத்வேகம் அளிப்பது, புத்துணர்வை ஏற்படுத்துவது ஆகும். வங்காள "மண்ணிலிருந்து" அனுப்பப்படும் ரசகுல்லாகளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் மம்தாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முன் கூட்டியே நன்றி கூறிக் கொள்கிறேன். எல்லோருக்கும் இதுபோன்ற பிரசாதம் கிடைக்காது.
பதிலடி
மக்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வீசும் கற்களை கலந்து செய்யப்படும் ரசகுல்லாக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால் வங்காள குடிமகன்கள் யாரும் கல்வீச்சால் காயமடையக் கூடாது. ரசகுல்லா வந்துவிட்டால் கற்களும் என்னிடம் வந்துவிடும். இனி கவலையில்லை என்று மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
பொதுவெளியில் ரகசியம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்ஷய்குமாருடனான நேர்காணலின்போது பிரதமர் மோடி கூறுகையில் எதிர்க்கட்சியில் உள்ள மம்தா பானர்ஜி ஆண்டுதோறும் எனக்கு ரசகுல்லாவையும் குர்தாக்களையும் அனுப்புவார் என்றார். இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாத ஒன்றை மோடி பொதுவெளியில் சொல்லிவிட்டார்.
மறு பக்கம் இனிப்பு
இதனால் ஒரு பக்கம் மோடியை திட்டுவது , மறுபக்கம் அதே மோடிக்கு ஸ்வீட் அனுப்புவது என திரிணமூல் கட்சியினர் குழப்பமடைந்தனர். தேர்தல் நேரத்தில் இது போல் மோடி கூறியதால் மம்தா கடும் கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா, இனி மோடிக்கு அனுப்பும் ரசகுல்லாவில் கற்களையும் மண்ணையும் கலந்து அனுப்புகிறேன். அதை சாப்பிடும் மோடியின் பற்கள் உடையட்டும் என்று மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.