அரிதிலும், அரிது.. பிரதமரின் பேச்சு ராஜ்யசபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
Recommended Video
டெல்லி: அரிதிலும் அரிதான நிகழ்வாக பிரதமரின் பேச்சு நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். அதுபோன்ற ஒரு நிகழ்வு பிரதமர் மோடிக்கு நேற்று நேர்ந்துள்ளது.
ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு, ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் தோல்வியடைந்தார்.
இதையடுத்து நேற்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற வேட்பாளரை புகழ்ந்துரைத்து உரையாற்றினார். அப்போது, ஹரிவன்ஷ் மற்றும் ஹரிபிரசாத் ஆகியோரின் இன்ஷியலை வைத்து ஜாலியாக ஏதோ கூறினார்.
ஆனால், அது ஆட்சேபனைக்குரிய வார்த்தை என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாஜக எம்.பிக்களும், நடந்த தவறை உணர்ந்ததால், பதில் பேச முடியவில்லை.
ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.பி மனோஜ் ஜா எழுந்து, பிரதமர் கூறிய வார்த்தைகளை திரும்ப கூறி, அவை விதிமுறை 238ன் கீழ், பிரதமர் பேசியது தவறான வார்த்தை என்பதால், அவைக் குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டும் என கோரினார். இதையேற்ற சபை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் பேசியதில் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கி உத்தரவிட்டார்.
பிரதமர் பேச்சு இப்படி நீக்கப்படுவது, வரலாற்றிலேயே முதல் முறை என கூறிவிட முடியாது. ஆனால், அரிதான நிகழ்வாகும். இதற்கு முன்பு, 2013ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக எம்.பி அருண் ஜேட்லி நடுவே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது இருவர் பேசியதிலும் சில பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.