காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் உரிய முடிவு எடுப்பார்: வி.நாராயணசாமி
டெல்லி: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் உரிய முடிவு எடுப்பார் என மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுகளின் கூட்டமைப்பு காமன்வெல்த் அமைப்பு ஆகும். இதன் மாநாடு, நவம்பர் 15ம் தேதி தொடங்கி 17ந்தேதி வரை இலங்கையில் கொழும்பு நகரில் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பின்னர் காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பொறுப்பு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு வரும்.
இந்தத் தலைவர் பொறுப்பு ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்து விட வாய்ப்புள்ளது. அதன் மூலம், இலங்கை உள்நாட்டுப் போர் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையையில் இருந்து ராஜபக்சே தப்பி விட ஏதுவாகலாம்.
எனவே இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் கைகோர்த்து நின்று தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்கப் பட்டபோது, "காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதால் ஏற்படுகிற சாதக, பாதகங்களை பிரதமர் மன்மோகன்சிங் ஆராய்ந்து, உரிய முடிவை எடுப்பார். கொழும்பில் நடக்கிற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்பதற்கு இன்னும் அவகாசம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை பற்றி கூறும்போது, ‘இலங்கையில் வாழுகிற தமிழ் மக்களின் நிலை குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ள கவலையை இலங்கை அரசு தணிக்க வேண்டும். இதில் இலங்கை அரசு சாதகமான பதிலை அளிக்க வேண்டும்' என பதில் அளித்தார்.