வெளிநாட்டில் மோடிக்கு கூடும் கூட்டம் தானாக வருவது அல்ல: குர்ஷித் தாக்கு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் கூடும் கூட்டம் தானாக வருவது அல்ல அவர் அழைத்துச் செல்லும் கூட்டம் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது எல்லாம் தன்னுடன் ஏராளமானோரை அழைத்துச் செல்கிறார். அதனால் தான் அவர் வெளிநாடுகளில் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தியர்கள் கூட்டம் கூடுகிறது. அந்த கூட்டம் மோடி தன்னுடன் அழைத்துச் செல்வது. நான் சொல்வதை நம்பவில்லை என்றால் விமான டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து பார்க்கவும்.
மியான்மர் தலைநகரின் தெருக்கள் வழக்கமாக காலியாக இருக்கும். இந்நிலையில் மோடி சென்றபோது மட்டும் அங்கு எப்படி அத்தனை இந்தியர்கள் கூடினார்கள். கூட்டத்தை அழைத்துச் செல்வதை விட்டுவிட்டு மோடி ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களை கவர முயற்சி செய்ய வேண்டும்.
ஜி-20 மாநாடு என்பது உலகின் 20 முக்கிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது என்பதை மோடி மறந்துவிட்டார் போன்று. அதனால் தான் ஜி 20 மாநாட்டை ஜி - ஆல் மாநாடு என்று தெரிவித்துள்ளார் என்றார்.