டெல்லி டி.ஆர்.டி.ஓ. தலைமையகத்தில் அக்.15-ல் அப்துல்கலாம் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலையை டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி மைய தலைமையகத்தில் (டி.ஆர்.டி.ஓ) வரும் 15-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக ஒன் இந்தியாவிடம் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் 84வது பிறந்த நாளையொட்டி அக்டோபர் 15-ந் தேதியன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. டெல்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ. தலைமையகத்தில் கலாமின் மார்பளவு சிலையை வரும் 15-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை மத்திய அரசு அதிகாரிகள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த மார்பளவு சிலை ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டுவிட்டது. கலாமின் மறைவைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய அரசு சார்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சி முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலாமின் உறவினர்களும் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள அப்துல்கலாமின் இல்லத்தை அறிவுசார் மையமாக்க வேண்டும் என்று கலாமின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகளிடம் நாம் பேசிய போது, ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்தில் தமிழக அரசு நினைவகம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு பரிந்துரைகளையும் ஆராய்ந்து வருகிறது. கலாமின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்திருக்கிறது என்றனர்.
இதனால் கலாமின் டெல்லி இல்லத்தில் உள்ள பொருட்கள் அக்டோபர் 31-ந் தேதிக்கு முன்னதாக ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
இதனிடையே அக்டோபர் 15-ந் தேதியன்று மாலை ஹைதராபாத்தில் டி.ஆர்.டி.ஓ வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்க உள்ளார். அந்நிகழ்ச்சியில் டி.ஆர்.டி.ஓ. ஏவுகணை வளாகத்துக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படுகிறது.