ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு
ஜெய்ப்பூர்: இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய துறையையே தனது சில நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் டிராக்டர் மூலம் பேரணி நடைபெறும் இடத்தை ராகுல் காந்தி வந்தடைந்தார்.
அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% மக்கள் விவசாய துறையையே நம்பி உள்ளனர். விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாய துறையை முழுவதுமாக நம்பி உள்ளனர்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்தமாக விவசாய துறையை தனது இரு நண்பர்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். இதுவே விவசாய சட்டங்களின் நோக்கம். விவசாயிகளுக்கு பல்வேறு ஆப்சன்களை தந்துள்ளதாக நரேந்திர மோடி கூறுகிறார்.
நிவர், புரெவி புயல்களால் பாதிப்பு... தமிழகத்துக்கு ரூ.223 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு!
ஆம். அவர் ஆப்சன்களை தந்திருக்கிறார் தான். ஆனால் பசி, வேலையின்மை மற்றும் தற்கொலை போன்ற ஆப்சன்களையே பிரதமர் மோடி போராடும் விவசாயிகளுக்கு தந்துள்ளார்" என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.
ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசிய இந்த விவசாயிகள் பேரணியின் மேடை, இரண்டு டிராக்டர்களின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி, டிராக்டர்களில் அமர்ந்திருந்த விவசாயிகள் ராகுல் காந்தியின் பேச்சை கேட்டனர்.