மோடிக்கு கடிதம் எழுதிய 8 வயது மாணவர்: பதில் அனுப்பிய பிரதமர் அலுவலகம்
பெங்களூர்: பல காலமாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு பெங்களூரைச் சேர்ந்த 8 வயது மாணவர் கடிதம் எழுதியதற்கு பதில் கிடைத்துள்ளது.
வடக்கு பெங்களூரில் உள்ள வித்யாரன்யபுராவில் இருக்கும் தொட்டபொம்மசந்திராவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அபினவ்(8). அவர் யஷ்வந்த்பூரில் இருக்கும் நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் 3வது வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல அவருக்கு 45 நிமிடங்கள் ஆகிறது. காரணம் அப்பகுதியில் பலகாலமாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம்.
இந்நிலையில் அவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது,
கோரகுண்டேபாள்யா சந்திப்பு அருகே அவுட்டர் ரிங் ரோட்டில் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி பல நாட்களாக நடந்து வருகிறது. இதனால் அந்த
பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்களின் உடல் நலம் மட்டும் அல்ல எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது.
இழுத்துக் கொண்டே இருக்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்குமாறு ரயில்வே துறைக்கு உத்தரவிடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அபினவின் கடிதத்தை பார்த்த பிரதமர் அலுவலகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து அபினவுக்கும் பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.