சி.பி.ஐ கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டதில் சர்ச்சை!
தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வந்த அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக கடந்த 7ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது.
இந்நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஒப்புதலின்றி அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாவும், நியமனத்தில் ஆணையத்தை பிரதமர் அலுவலகம் புறக்கணித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
அமைச்சரவை நியமன குழுவுக்கு தலைவராக பிரதமர் இருக்கிறார் என்றும், ஆணைய ஒப்புதலின்றி நியமிக்க அமைச்சரவை நியமன குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பச்நந்தாவைத்தான் ஊழல் தடுப்பு ஆணையம் பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அர்ச்சனா நியமனம் தொடர்பாக வழக்கு தொடர சமூக நல ஆர்வலர் வினித் நரேன் முடிவு செய்துள்ளார்.