"அரசுக்கு எதிரான" ராஜ்யசபா டிவி.. கோபத்தில் பிரதமர் அலுவலகம்.. "லோக்சபா"வுடன் இணைக்க முடிவு
டெல்லி: ராஜ்யசபா என்றாலே மோடிக்கும், பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போல. லோக்சபாவை விட ராஜ்யசபாவில்தான் பாஜக அரசுக்கு நிஜமாகவே பல சிக்கல்கள். அங்குதான் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளைத் தாஜா செய்துதான் சட்ட மசோதாக்கை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ராஜ்யசபா டிவியால் மோடிக்கு ஒரு எரிச்சல் வந்து சேர்ந்துள்ளது.
லோக்சபா டிவி மற்றும் ராஜ்யசபா டிவி என இரு டிவி சேனல்கள் உள்ளன. இந்த இரு சானல்களுமே அந்தந்த சபைகள் தொடர்பான செய்திகளுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராஜ்யசபா டிவி மீது பிரதமர் அலுவலகம் அதிருப்தியுடன் உள்ளது. அரசை விமர்சிக்கும் நிகழ்ச்சிகள் இதில் வருவதே இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக பல்வேறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கலந்து கொண்டு இதில் பேசுகிறார்கள், அரசின் திட்டங்களை விமர்சிக்கிறார்கள்.
சோம்நாத் சாட்டர்ஜி .. அன்சாரி
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது லோக்சபா சபாநாயகராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியின் கோரிக்கைக்கு ஏற்பட லோக்சபா டிவி கொண்டு வரப்பட்டது. அடுத்து ஹமீத் அன்சாரி யோசனையின்பேரில் ராஜ்யசபா டிவியும் பிறந்தது.
அரசின் கட்டுப்பாட்டில் லோக்சபா.. அன்சாரி கட்டுப்பாட்டில் ராஜ்யசபா
இதில் லோக்சபா டிவி மட்டும்தான் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராஜ்யசபா டிவியோ பொதுத்துறை நிறுவனங்களின் விளம்பர வருவாய் மூலம் இயங்கி வருகிறது. எனவேதான் ராஜ்யசபா டிவிக்கு நல்ல வருவாய் உள்ளது. இந்த டிவி ஹமீத் அன்சாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு தாராள அனுமதி
பாஜகவைப் பொறுத்தவரை அதற்கு லோக்சபாவில்தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் அது மைனாரிட்டி ஆகும். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியினர் பேச அதிக நேரம் தரப்படுகிறது. அன்சாரி பாரபட்சம் இல்லாமல் பேச அனுமதிக்கிறார். எனவேதான் ராஜ்யசபா டிவியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக அளவில் பேச முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடுப்பில் மோடி அலுவலகம்
ராஜ்யசபா டிவி இப்படி அரசுக்கு எதிரானவர்களின் கருத்துக்களையும், பேட்டிகளையும் ஒளிபரப்புவது பிரதமர் அலுவலகத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இதையடுத்து ராஜ்யசபா டிவியின் நிகழ்ச்சிகளை மத்திய அரசு கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளதாம். தீவிரமாக கண்காணித்து வருகிறதாம்.
வருவாய் ஜாஸ்தி
இதில் என்ன வேடிக்கை என்றால் லோக்சபா டிவி எல்லாவற்றுக்கும் அரசையே நம்பியுள்ளது. குறிப்பாக அரசின் பணத்தை முழுமையாக அது நம்பியுள்ளது. ஆனால் ராஜ்யசபா டிவியிடம் அதிக அளவில் வருவாய் உள்ளது. சொந்தமாக அது வருவாய் ஈட்டியும் வருவதால் அரசை நம்பியிராமல் செயல்படுகிறது.
படம் தயாரிக்கும் திட்டம்
அத்தோடு நில்லாமல், இந்திய நாடாளுமன்ற வரலாது தொடர்பாக அது பல்வேறு ஆவணப் படங்களையும் தயாரித்து வருகிறது. இந்தப் படங்களை பிற டிவி சேனல்களுக்கு விற்கவும் ராஜ்யசபா டிவி முடிவு செய்துள்ளது.
கோபத்தில் அரசு
இதனால் மேலும் கோபமடைந்துள்ள மத்திய அரசு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கவுன்சிலை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்திரா காந்தி காலத்தில் இந்த கவுன்சில்தான் அரசு சார்பான படங்களை எடுக்கும். தற்போது அதற்கு உயிரூட்டி ராஜ்யசபா டிவிக்கு ஆப்பு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.
ஹமீத் அன்சாரி இருக்கும் வரை முடியாது
மேலும் ராஜ்யசபா டிவிக்கு மொத்தமாக மூடு விழா காணும் வகையில் அதை லோக்சபா டிவியுடன் இணைத்து விடவும் பிரதமர் அலுவலகம் யோசித்து வருகிறதாம். இதன் மூலம் ராஜ்யசா டிவியின் அட்டகாசம் முடிவுக்கு வரும் என அது நினைக்கிறது. சன்சத் டிவி என்று புதி சேனலுக்குப் பெயர் சூட்டப்படுமாம்.
போகும் வரை காத்திருக்க வேண்டும்
இருப்பினும் இது சாத்தியமா என்று தெரியவில்லை. இதற்கு கண்டிப்பாக கடும் எதிர்ப்பு கிளம்பும். காரணம் இந்த டிவிக்கான ஐடியாவைக் கொடுத்தவரே ராஜ்யசபா தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரிதான். எனவே ராஜ்யசபா டிவியயை மூடுவதற்கு முன்பு நூறு முறை யோசிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.
2017ல் வாய்ப்புண்டு
அதேசமயம் 2017ம் ஆண்டு அன்சாரி ஓய்வு பெறுகிறார். எனவே அந்த சமயத்தில் ராஜ்யசபா டிவியை மூட பாஜக அரசு முயற்சிக்கலாம் என்று தெரிகிறது. இதுதான் பாஜக கண்களை உறுத்துகிறது.. எனவேதான் ராஜ்யசபா டிவியை லோக்சபா டிவியுடன் இணைக்க அது துடிக்கிறது.
ராஜ்யசபா டிவியை முடக்க மத்திய அரசு யோசித்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.